கச்சா எண்ணெய் விலை சரிவால் மீண்டெழுந்த இந்திய பங்குச் சந்தை!
சென்செக்ஸ் 639.82 புள்ளிகள் உயர்ந்து 78,205.98 புள்ளிகளாகவும், நிஃப்டி 233.55 புள்ளிகள் உயர்ந்து 24,261.60 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் மேற்காசியாவில் ராணுவ நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று சூசகமாக தெரிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய பங்குச் சந்தைகளில் மீட்சி ஏற்பட்டு, தொடர்ந்து இரண்டு நாட்களாக இருந்த சரிவை முறித்துக் கொண்டு, இந்திய பங்குச் சந்தை அளவுகோல் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவீதம் உயர்ந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 960.09 புள்ளிகள் உயர்ந்து 78,526.25 புள்ளிகளாகவும் இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 639.82 புள்ளிகள் உயர்ந்து 78,205.98 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 233.55 புள்ளிகள் உயர்ந்து 24,261.60 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, இன்டர்குளோப் ஏவியேஷன், மாருதி, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எடர்னல், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், ஐஷர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம், எம்&எம் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் இன்ஃபோசிஸ், எடர்னல், பாரதி ஏர்டெல், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமிக்ஞை செய்ததால், மத்திய கிழக்கில் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நிலையில் இந்த மீட்சி ஏற்பட்டது. இந்த வளர்ச்சியானது உலகளாவிய கச்சா எண்ணெயின் விலையை சரிய செய்தது.
மத்திய கிழக்கில் மோதல்கள் தணியத் தொடங்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளுக்கு சந்தைகள் சாதகமாக எதிர்வினையாற்றியதால், உலகளாவிய முதலீட்டாளர்களின் மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், நிஃப்டி-50 குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் முன்னேறியது.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.6 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடுகள் 2 சதவீதமும் உயர்ந்ன.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.6.5 லட்சம் கோடி அதிகரித்து ரூ.447.59 லட்சம் கோடியாக உயர்ந்தன.
ஐடி மற்றும் எண்ணெய் & எரிவாயு தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்தன. நுகர்வோர் சாதனங்கள் குறியீடு 2.6 சதவீதமும், ஆட்டோ குறியீடு 3 சதவீதமும், பொதுத்துறை வங்கி குறியீடு 2.2 சதவீதம் உயர்ந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 5.35 சதவீதம் உயர்ந்ததும், ஜப்பானின் நிக்கி 225 2.88 சதவீதம் உயர்ந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும் உயர்ந்தன.
ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தை நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்து முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.6,345.57 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பணை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.9,013.80 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 9.03 சதவீதம் சரிந்து 90.26 அமெரிக்க டாலராக முடிந்த நிலையில், கச்சா எண்ணெய் ஏற்பட்ட மாற்றம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தது.