ஆரணியில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தேர்வு செய்தார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜவ்வாதுமலை வட்டம் உருவாக்கப்படும் என்றும், ஆரணி, போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை வட்டங்களை உள்ளடக்கி ஆரணி கோட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், ஆரணியில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில், ஆரணியில் உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலகத்தை சீரமைத்து கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க இடத்தைத் தேர்வு செய்ததுடன், அந்தப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
மேலும், ஆரணி சார் - பதிவாளர் அலுவலகம் பின்புறமுள்ள காலியிடத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டார்.
உடன், முன்னாள் மேற்குஆரணி ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், வட்டாட்சியர் சுப்பிரமணி உள்ளிட்டோர் இருந்தனர்.