திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் 18-ஆவது ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் மா.புர்க்கிந்த்ராஜ், இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜி.மோகன்குமார் வரவேற்றார்.
திரைப்பட நடிகர் ஜீவா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார்.
அப்போது, பொறியியல் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தி கல்வி பயில வேண்டும். படிப்பை முடித்து வெளியே வரும்போது ஒரு நல்ல மாணவராக, மாணவியாக வெளியே வர வேண்டும். அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மாணவர்கள் அமைதியாக நடத்தி வெற்றி கண்டனர் என்றார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.