சுற்றுப்புற சுகாதாரத்தை வலியுறுத்தி 7 கி.மீ. பின்னோக்கி நடந்து பள்ளி மாணவர் உலக சாதனை முயற்சி
திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனியார் பள்ளி
திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனியார் பள்ளி மாணவர் 7 கி.மீ. தொலைவு பின்னோக்கி நடந்து சென்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருபவர் ஜி.சிவகுரு (11). யோகா பயிற்சி பெற்ற இவர், மாவட்ட பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.
அதன்படி, 7 கி.மீ. தொலைவு பின்னோக்கி நடந்து சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், உலக சாதனை முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கிய இந்த சாதனை முயற்சி தொடக்க விழாவுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ரோஷன்லால் தலைமை வகித்தார்.
சர்வதேச மனித உரிமைக் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.பாலமுருகன், சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழக நிர்வாகி எஸ்.சுரேஷ்குமார், ஜெய்சிவ் அகாதெமி நிறுவனர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை ஸ்ரீசரஸ்வதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் பி.கணேசன் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவரின் உலக சாதனை முயற்சியை தொடக்கி வைத்தார்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து நகரின் மையப் பகுதியில் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் வரையில் சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு மாணவர் சிவகுரு பின்னோக்கி நடந்து சென்று பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழகம், ஸ்ரீசரஸ்வதி விகாஸ் மெட்ரிக் பள்ளி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், எல்ஐசி வளர்ச்சி அலுவலர் பி.பாபு, தொழிலதிபர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.