திருவண்ணாமலை தூய உலக மாதா பேராலயத்தின் 45-ஆவது ஆண்டுப் பெருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 18, 19) நடைபெறுகிறது.
திருவண்ணாமலை தூய உலக மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான 45-ஆவது ஆண்டுப் பெருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, சனிக்கிழமை வேலூர் மறை மாவட்ட முதன்மை குரு ஐ.ஜான் ராபர்ட் தலைமையில் நற்கருணைப் பெருவிழா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் ஆடம்பர சிறப்பு கூட்டுத் திருப்பலி, புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல், திருவருட்சாதனம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நிகழ்ச்சியில், இறையரசு சபையின் நிறுவனரும், பேராயருமான ஏ.எம்.சின்னப்பா கலந்து கொள்கிறார். தொடர்ந்து, நகர வீதிகளில் அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது.