முகப்பு
திருவண்ணாமலை

கரியமங்கலம் ஏரிக் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்: 20 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு

செங்கம் பகுதி விவசாயிகள், பொதுமக்களின் 20 ஆண்டு கால கோரிக்கை ஏற்கப்பட்டு, செங்கம் ஏரியிலிருந்து கரியமங்கலம் ஏரிக்குச் செல்லும்

Updated On : 9 ஜூலை, 2018 at 6:57 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

செங்கம் பகுதி விவசாயிகள், பொதுமக்களின் 20 ஆண்டு கால கோரிக்கை ஏற்கப்பட்டு, செங்கம் ஏரியிலிருந்து கரியமங்கலம் ஏரிக்குச் செல்லும் கால்வாயை ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தனர்.
செங்கத்தை அடுத்த கரியமங்கம், முறையாறு ஆகிய பகுதிகளில் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்கள் காயம்பட்டு முதல் கரியமங்கலம் வரை ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன.
இதனால் செங்கம் ஏரியில் இருந்து கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு வழியில்லாததால் கடந்த பல ஆண்டுகளாக கரியமங்கலம் ஏரி நிரம்பாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக கரியமங்கலம், முறையாறு, பேயாலம்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். சிலர் விளை நிலங்களை 
விற்றுவிட்டு வெளி மாநிலகளுக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டனர்.
கடந்த 20 ஆண்டு காலமாக அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் செங்கம் ஏரியில் இருந்து காயம்பட்டு, மேல்புழுதியூர், முறையாறு வழியாக வரும் கால்வாய்களை தூர்வாரி, சீரமைத்து கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுப்பணித் துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தும், அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை பொதுப்பணித் துறையினர் ஏற்று, காயம்பட்டு பகுதியிலிருந்து கரியமங்கலம் ஏரி வரையிலான கால்வாய்களை தூர்வாரி, சீரமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். அதனடிப்படையில், காயம்பட்டு பகுதியில் ஏரிக் கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடங்கியது.
விழாவில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர்மாதவன் தலைமையில், மாவட்ட வணிகவரித் துறை ஆலோசனைக்குழு  உறுப்பின்ர் மதியழகன் பூமிபூஜை செய்து பணியை தொடக்கிவைத்தார்.
இதில், நீர்ப்பாசன சங்கத் தலைவர் வெங்கடேசன், கரியமங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவர் சங்கர், தலைவர்களின் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் கோவிந்தராஜ், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் ராஜாராம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.