நாட்டுத் துப்பாக்கி வெடித்து ஆயுதப்படை காவலர் பலத்த காயம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே ஞாயிற்றுக்கிழமை சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டபோது
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே ஞாயிற்றுக்கிழமை சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டபோது, நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஆயுதப்படைக் காவலர் பலத்த காயமடைந்தார்.
தண்டராம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் மது விலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
குங்கிலிநத்தம் மலை கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, தரையில் கிடந்த ஒரு நாட்டுத் துப்பாக்கியை சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் அசோக்குமார் எடுத்தார்.
அப்போது, திடீரென நாட்டுத் துப்பாக்கி வெடித்தது. இதில், அசோக்குமாரின் காலில் குண்டு பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவரை சக போலீஸார் மீட்டு, திருவண்ணமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அசோக்குமார் அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வானாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.