செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஆலத்தூர் பகுதியில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ், வேளாண் கருவிகளை பெற விவசாயிகள் விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்கம் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு வட்டாட்சியர் ரேணுகா தலைமை வகித்தார். வேளாண்மை துணை அலுவலர் ஜெயசீலன் வரவேற்றார். உதவி வேளாண்மை இயக்குநர் சண்முகவேல் கலந்து கொண்டு, நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் நுண்ணீர், சொட்டுநீர் பாசனக் குழாய்கள் வழங்கப்படுவதாகவும், அதனை பெற விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயிச் சான்று, ஆதார் எண், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை வேளாண் துறை அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம் என்றும் தெரிவித்தார். முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சசிகுமார், சேட்டு, பார்த்தசாரதி,
ஐயப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.