அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப் பூச தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப் பூசத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப் பூசத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, புதன்கிழமை தை மாதம், பூச நட்சத்திரத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, உற்சவர் ஸ்ரீசந்திரசேகரர் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள ஈசான்ய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார். பகல் 12.30 மணிக்கு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியே உற்சவர் ஸ்ரீசந்திரசேகர் மீண்டும் கோயிலை வந்தடைந்தார். இந்த தீர்த்தவாரியைக் காணவும், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீசந்திரசேகரரைக் காணவும் ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டிருந்தனர்.