செய்யாறு நகராட்சிப் பகுதியில் கொசுப் புழுக்கள் உற்பத்திக்குக் காரணமாக இருந்த மூவருக்கு ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.
செய்யாறு 15-ஆவது வார்டு பகுதியான மார்கெட் -காமராஜ் நகரில் நகராட்சி சார்பில் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்போது, சில இடங்களில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் தூய்மையின்றி காணப்பட்ட வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நகராட்சி சார்பில் மார்க்கெட் பகுதியில் வியாழக்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணியை ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் சி.ஸ்டான்லி பாபு, துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, காமராஜர் நகர் 2-ஆ வது தெருவில் சேட்டு என்பவரது வீட்டுமனையில் குவிக்கப்பட்டிருந்த தேங்காய் சிரட்டைகளில் நீர் தேங்கி, கொசுப் புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அவருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, அதே பகுதியில் 3- ஆவது தெருவில் மஹாபூப் பாட்சா என்பவர் வீட்டில் கட்டுமான பணிக்காக அதிகளவு பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் பிடித்து வைத்திருந்ததில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி இருந்ததால், அவருக்கும் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காமராஜர் நகர் 3- ஆவது தெருவில் உள்ள வீடு ஒன்றில் உணவகம் நடத்தி வரும் தங்கதுரை என்பவர் வீட்டைச் சுற்றிலும் தேவையற்ற பொருள்களை குவித்து வைத்திருந்தார். அங்கிருந்த பிளாஸ்டிக் டிரம்களில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகியிருந்தது கண்டறியப்பட்டு, அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் விதித்ததுடன் அந்தப் பகுதியில் சுற்றப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.