ஜோலார்பேட்டை அருகே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் விசாரணைக்கு பயந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனுôர் ஆரிகான் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா (55). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த கணபதி (45) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வீட்டு பட்டாவை அடமானம் வைத்து ரூ. 10 ஆயிரம் வாங்கினார். இந்நிலையில், இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன் இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் கணபதி மற்றும் அவரது மனைவி சரஸ்வதி, உறவினர்கள் சவுந்தரராஜன், நரேந்திரகுமார் ஆகியோர் மஞ்சுளாவின் மகன் ராஜீவ் காந்தியை (28) சரமாரியாகத் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த ராஜீவ் காந்தி திருப்பத்துôர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மஞ்சுளா தரப்பினர் தாக்கியதில் சரஸ்வதியும் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில், 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சரஸ்வதி (40), தன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதை அறிந்து விசாரணைக்கு பயந்து வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸார், அங்கு சென்று சரஸ்வதியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.