நீதிமன்றக் கட்டட மேல்கூரை சேதம்: ஒப்பந்ததாரர், பொதுப்பணித் துறையினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
செய்யாறில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தின் மேல்கூரை சேதமடைந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர், பொதுப்பணித் துறையினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
செய்யாறில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தின் மேல்கூரை சேதமடைந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர், பொதுப்பணித் துறையினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
செய்யாறில் ரூ.9 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டது. இங்கு, சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய 4 நீதிமன்றங்களும், நீதிமன்ற அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் தாழ்வாரத்தில் சிமென்ட் கலவை பூச்சு கடந்த மாதம் 24-ஆம் தேதி சரிந்து விழுந்ததில் வழக்குரைஞர் நாராயணன் காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி, பாதிக்கப்பட்ட வழக்குரைஞர் நாராயணனை சந்தித்த பிறகு நீதிமன்றத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாவட்ட நீதிபதி மகிழேந்தி கூறியதாவது: வழக்குரைஞர்கள் சங்கத்தின் தீர்மானம் புகாராக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. தக்க விசாரணை பிறகு குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். கட்டுமான காலத்தில் இருந்த பொறியியல் துறையைச் சேர்ந்தவர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள், கட்டுமானத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததார நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்யாறு காவல் நிலையத்தில் கடந்த 5-ஆம் தேதி வக்குரைஞர் ஜி.அசோக் புகார் மனு அளித்தார். அதன்பேரில், ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல் உதவி ஆய்வாளர் ஷாகின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.