செங்கம் அருகே ஆதரவற்ற 110 குழந்தைகளுக்கு பொங்கல் புத்தாடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
செங்கத்தை அடுத்த சின்னகாயம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள 110 ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு செங்கம் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாசலபதி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை, இனிப்புகளை வழங்கி, பொங்கல் வாழ்த்துகளை கூறினார்.
நிகழ்ச்சியில் செங்கம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் பார்த்தசாரதி, எச்.பி. சமையல் எரிவாயு விநியோக நிறுவன உரிமையாளர் அசோகன், செங்கம் வட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் தனஞ்செயன் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.