ஆரணியில் தம்பியை வெட்டிக் கொலை செய்ததாக அண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
ஆரணி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் யோகா என்ற யோகானந்தம் (35). இவர், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடையில் காட்டன் சூதாட்டம் நடத்தி வந்தாராம். இவரிடம் இவரது பெரியம்மா மகன் பாண்டியன் (37) அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தாராம்.
இதேபோல, வியாழக்கிழமை யோகானந்தத்திடம் பாண்டியன் பணம் கேட்ட நிலையில், அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாண்டியன், யோகானந்தத்தை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதில், பலத்த காயமடைந்த யோகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், ஆரணி வி.ஏ.கே. நகர் ஆற்றுப்பாலப் பகுதியில் வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த பாண்டியனை ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீஸார் கைது செய்தனர்.
பாண்டியன் மீது ஏற்கெனவே உறவினரின் கார் கண்ணாடியை உடைத்த வழக்கு, யோகானந்தத்தின் அண்ணன் சண்முகத்திடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் உள்ளன.