ஆரணியை அடுத்த இரும்பேடு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாவின்போது ஏற்பட்ட தகராறு தொடர்பான விசாரணைக்காக, பள்ளி, கல்லூரி மாணவர்களை போலீஸார் அழைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணியை அடுத்த இரும்பேடு அரசுப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள், விழாவில் பங்கேற்ற மற்றொரு தரப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் மீதும், பள்ளியில் பயிலும் மாணவர்கள் மீதும் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், விசாரணைக்காக பள்ளி, கல்லூரி மாணவர்களை காவல் நிலையத்துக்கு வருமாறு போலீஸார் அழைத்தனராம். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் இரும்பேடு கிராமத்திலுள்ள ஆரணி - ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி டிஎஸ்பி செந்தில் தலைமையிலான போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.