திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தக் கல்லூரியின் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், உடல்கல்வி இயக்குநர் எம்.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ் வரவேற்றார்.
திருவண்ணாமலை டிஎஸ்பி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றுகளை வழங்கிப் பேசினார்.
அப்போது அவர், மாணவ-மாணவிகள் தங்களது உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். உடல் திறனை வளர்த்துக்கொண்டால் கல்வியிலும் சாதிக்கலாம்.
காவல்துறையில் பணியில் உள்ளவர்கள் பலரும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களாக இருப்பார்கள். நீங்களும் பல்வேறு சாதனைகளைப் புரிந்து கல்வியிலும், விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விழாவில், கல்லூரி கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், உடல்கல்வி இயக்குநர் ஆர்.மீரா, கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.