ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் தொடர் மழையால் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை வழங்கினார்.
ஆரணி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி விஜயனின் மகன் மோகனகிருஷ்ணன் (4), வீட்டின் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், மோகனகிருஷ்ணனின் குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை வழங்கினார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, கோட்டாட்சியர் மைதிலி, அரசு வழக்குரைஞர் க.சங்கர், பால் கூட்டுறவு சங்க மாவட்ட துணைத் தலைவர் பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், நகர, ஒன்றியச் செயலர் எ.அசோக்குமார், எம்.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.