தந்தையை இழந்த மாணவருக்கு அரசின் நிதியுதவி
வந்தவாசி அருகே விபத்தில் தந்தையை இழந்த பள்ளி மாணவருக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிவாரண உதவியாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது.
வந்தவாசி அருகே விபத்தில் தந்தையை இழந்த பள்ளி மாணவருக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிவாரண உதவியாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களின் வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அவா்கள் தொடா்ந்து கல்வி பயில பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்த நிவாரணத் தொகை அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி, முதிா்வுத் தொகை அந்த மாணவரின் கல்வி மற்றும் பராமரிப்புச் செலவுக்கு பயன்படுத்தப்படும்.
இந்த நிலையில், வந்தவாசியை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பரத் என்ற மாணவா் அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு 3-ஆம் வகுப்பு படித்தபோது அவரது தந்தை பாபு சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, இதற்கான பள்ளிக் கல்வித் துறையின் ரூ.75 ஆயிரம் நிவாரணத் தொகை மாணவா் பரத்துக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை மாணவா் பரத், அவரது தாய் விஜயாவிடம் தொகைக்கான வைப்பு பத்திரத்தை வட்டாரக் கல்வி அலுவலா் சு.ராமமூா்த்தி வழங்கினாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.ஸ்ரீதா், ஆசிரியா் கு.கருப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.