குறைந்தது 4 தேசிய விருதுகள்! நூறு சாமி படத்தைப் பாராட்டிய இயக்குநர்!
நூறு சாமி திரைப்படம் தொடர்பாக...
இயக்குநர் சுப்ரமணியம் சிவா நூறு சாமி திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இதுவும் உணர்வுப்பூர்வமாகவே எழுதப்பட்டுள்ளதால், படத்திற்கு, ‘நூறு சாமி’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இதில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா ஆகியோர் முன்னணி நடிகர்களாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளதால் விரைவில் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இயக்குநர் சுப்ரமணியம் சிவா இப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “என்ன சொல்வது? இப்போது என் மனநிலையில் என்னால் முழுமையாக எழுதவும் முடியாது. என்னை அழ வைத்து, மனதை நிலைகுலைய வைத்து பின்பு ஆராரோ பாடி ஆசீர்வதித்த 'நூறு சாமி’ பற்றி...
சசி அண்ணா... என்னை மன்னித்து விடுங்கள். இன்று உங்களை சந்தித்தது என் தவறு. தங்களின் ‘நூறு சாமி’ படத்தின்2 பாடல்களின் காட்சிகளை நானே விரும்பி கேட்டு பார்த்ததும் என் தவறுதான். அதை பார்த்து கொண்டிருக்கும்போதே என் கண்ணீரை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை. என் அழுகை இன்னும் தொடர்கிறது. எனவே, இப்போது உணர்கிறேன். நான் தவறு என்று நினைத்தது என் வரம். சசி அண்ணா, உங்களின் ‘நூறு சாமி’ ஏன் என்னை இப்படி அடங்கா அழ வைக்க வேண்டும், அக்கண்ணீரை நான் ஏன் இக்கணம் வரம் என நினைக்க வேண்டும். இதுவே, தங்களின் நூறு சாமிகளின் கட்டளை என என் உள்ஒளி சொல்கிறது.
எனவே, ‘நூறு சாமி’ படத்தின் மூலசாமி சசி அண்ணா நீங்கள், உங்களை இப்போதும் வழியும் என் கண்ணீரைத் துடைக்க மனம் வராமல் சொல்கிறேன். நீங்கள் ‘நூறு சாமி’ என்ற திரைப்படம் எடுக்கவில்லை. இப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் உங்கள் மனம் போல்… உங்களை போல் … ஒருசாமி ஆக வேண்டும் என்பதே தங்களின் ஆகச்சிறந்த அதிபடைப்பான நூறு சாமிகள் நோக்கம். அதையே தான் வழி மொழியும் என் கண்களில் வழிந்து கொண்டிருக்கும் நன்னீரும்... வணங்குகிறேன் சசி அண்ணாவை!
இறுதியாகவும் என் உள்ஒளி சொல்வது இயக்குநர் சசி அண்ணன் எடுத்திருப்பது நூறு சாமிகள் என்ற திரைக்காவியமல்ல, நாம் ஒவ்வொருவரும் ‘நூறு சாமிகள்’ ஆக வேண்டும் என எழுப்பி இருக்கும் திரைக்கோபுரம்! மாபெரும் வெற்றி நிச்சயம். குறைந்தது 4 தேசிய விருது கட்டாயம் உண்டு!” எனத் தெரிவித்துள்ளார்.