தெய்வமாகப் பார்த்தால் அது பிச்சைக்காரன்; மனுஷியாகப் பார்த்தால் நூறு சாமி: இயக்குநர் சசி
நூறு சாமி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சசி பேசியது குறித்து...
இயக்குநர் சசி நூறு சாமி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், “ தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன். தாயை மனுஷியாக பார்த்தான்- அது நூறு சாமி” எனக் கூறியுள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் ஆண்டனியும் நடிகை ஸ்வாசிகாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் டீசர் காட்சிகள் கவனம் ஈர்த்திருந்தது.
Advertisement
Advertisement
கணவனை இழந்த தாய்க்கும் உணர்வுகள் உண்டு, உரிமைகள் உண்டு என்பதைக் காட்டும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சசி பேசியிருப்பதாவது:
இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில்தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, 'நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை; நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன்' என்றார்.
இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகுதான் நாயகன் வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்த படத்தில் கடைசி 40 நிமிடத்தில்தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாகதான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் 'நூறு சாமி' படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.
இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு எஜமான்கள் ( Boss) ஒன்று இந்தக் கதையை நம்பி முதலீடு செய்து, தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த எஜமான் - படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.
என்னுடைய இரண்டாவது எஜமான் - ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டைதான் தெரிவிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறேன். ரசிகர்களிடம் இந்தத் திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.
இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்... தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.
தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன். ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்- அது நூறு சாமி.
இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை. இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் '' என்றார்.