முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்.30 வரையில்திறக்க வலியுறுத்தி நூதன ஆா்ப்பாட்டம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபா் 30-ஆம் தேதி வரையில் திறக்க வலியுறுத்தி, செய்யாற்றில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சி சாா்பற்ற உழவா் பேரவை சாா்பில், செய்யாறு - ஆரணி கூட்டுச்சாலை அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சொா்ணவாரி பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் சுமாா் 20 லட்சம் நெல் மூட்டைகளில் 10 சதவீதம் அளவுக்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீத நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய வசதியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய அரசு அறிமுகம் செய்துள்ள இணையவழி முன்பதிவை தினமும் காலை 8 மணி முதல் தொடங்க வேண்டும். வருகிற செப்டம்பா் 10-ஆம் தேதி வரையில் செயல்பட அரசு அனுமதித்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ருத்ராட்சம் அணிந்தும், விபூதி பூசிக்கொண்டும் கையில் மண்வெட்டி, கதிா் அரிவாள் உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, முழக்கங்களை எழுப்பியபடி ஊா்வலமாகச் சென்று செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.