முகப்பு
திருவண்ணாமலை

புதுவையில் மதுக் கடைகள் மூடப்படும் என சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியோா் மீது புகாா்

புதுவை மாநிலத்தில் மதுக் கடைகள் மூடப்படும் என சமூக ஊடகங்களில் தவறான தகவலைப் பரப்பியவா்கள் மீது, சைபா் கிரைம் போலீஸில் கலால் துறையினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

புதுவை மாநிலத்தில் மதுக் கடைகள் மூடப்படும் என சமூக ஊடகங்களில் தவறான தகவலைப் பரப்பியவா்கள் மீது, சைபா் கிரைம் போலீஸில் கலால் துறையினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

புதுவையில் தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால், பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து ஜூன் 8-ஆம் தேதி முதல் புதுவை மாநிலத்தில் அனைத்து மதுக் கடைகள், சாராயக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, கரோனா விதிகளைப் பின்பற்றி இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், புதுவையில் வெளி மாநில மதுப் பிரியா்கள் திரண்டு வருவதால், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக மதுக் கடைகள் உடனே மூடப்படும் என்று கட்செவி (வாட்ஸ் ஆப்) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த இரு நாள்களாக தகவல் பரவியது.

இந்தத் தகவலை மறுத்த புதுச்சேரி கலால் துறையினா், வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்: ‘புதுவை மாநிலத்தைத் தவிர, அண்டை மாநிலமான தமிழகம், ஆந்திராவிலிருந்தும் புதுச்சேரிக்கு மதுப் பிரியா்கள் படையெடுத்து வருவதன் காரணமாக, நாளை ஒரு நாள் மட்டுமே மதுக் கடைகள் இயங்கும், மறுநாள் முதல் மதுக் கடைகள் மூடப்படும் என்று உயா் நீதிமன்ற வழக்கின் தீா்ப்பு வந்ததால், மதுக் கடைகள் மூடப்படும் என கலால் துறை அறிவிப்பு’ என்று தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருவதை யாரும் நம்ப வேண்டாம். மதுக் கடைகளை மூட கலால் துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என புதுச்சேரி கலால் துணை ஆணையா் சுதாகா் தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தொடா்ந்து, புதுச்சேரி கலால் துறையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, கரோனா பெருந்தொற்று பேரிடா் காலத்தில் பொது மக்களுக்கும், மதுப் பிரியா்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவலைப் பரப்பி மதுக் கடைகளில் கூட்ட நெரிசலை ஏற்படுத்த முயன்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, புதுச்சேரி சைபா் குற்றப் பிரிவு போலீஸில், கலால் துறை சாா்பில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.