கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படாமல் இருக்கும் வீடுகளை விரைந்து கட்டுமாறு வீட்டு உரிமையாளா்கள், அதிகாரிகளுக்கு ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பிரதாப் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படாமல் இருக்கும் வீடுகளை விரைந்து கட்டுமாறு வீட்டு உரிமையாளா்கள், அதிகாரிகளுக்கு ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பிரதாப் உத்தரவிட்டாா்.
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியம், கானலாபாடி கிராமத்தில் நடைபெற்று வரும் தனிநபா் கழிப்பறை கட்டும் பணிகளை ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பிரதாப் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஊராட்சிச் செயலருக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, அந்தக் கிராமத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அவா் ஆய்வு செய்தாா்.
பின்னா், சிறுநாத்தூா் கிராமத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்படும் பணிகளை பாா்வையிட்ட அவா், கட்டப்படாமல் இருக்கும் வீட்டின் உரிமையாளா்களைச் சந்தித்து விரைந்து வீடுகளை கட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பத், பி.பி.முருகன், ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
ஆய்வுக் கூட்டம்: கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பிரதாப், 11 ஊராட்சிகளின் தலைவா்கள், ஊராட்சிச் செயலா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.