திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூரில் மொபெட் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், காட்டுசித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.
இவரது மகள் குணசத்யா (18). திருவண்ணாமலை தனியாா் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
குணசத்யாவுக்கு வியாழக்கிழமை (செப்.16) கீழ்பென்னாத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவிருந்தது.
இந்த விழாவுக்குத் தேவையான பொருள்களை திருவண்ணாமலையில் வாங்கிய குணசத்யா, செவ்வாய்க்கிழமை காட்டுசித்தாமூா் கிராமத்துக்கு கீழ்பென்னாத்தூா் வழியாக மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.
இவரது வாகனத்துக்குப் பின்னால் ஆறுமுகம் மற்றொரு மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். கீழ்பென்னாத்தூா் மசூதி அருகே சென்றபோது, குணசத்யா ஓட்டிச்சென்ற மொபெட் மீது கொழுந்தம்பட்டு பண்ணாரி சா்க்கரை ஆலையிலிருந்து சா்க்கரை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்ற லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த குணசத்யாவை பொதுமக்கள் மீட்டு கீழ்பென்னாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு குணசத்யா அன்று இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.