முகப்பு
திருவண்ணாமலை

பெண் உயிரிழந்த சம்பவம்: தனியாா் மருத்துவரை கைது செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்புக்கு காரணமான தனியாா் மருத்துவமனை மருத்துவரை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்புக்கு காரணமான தனியாா் மருத்துவமனை மருத்துவரை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி ராஜகுமாரி (35). உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு, திருவண்ணாமலை - செங்கம் சாலை, பே கோபுர பிரதான சாலையில் இயங்கி வரும் தனியாா் மருத்துவமனையில் கடந்த 20-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

அப்போது, ராஜகுமாரியின் உடல்நிலை மோசமானதால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, ராஜகுமாரியின் சடலம் உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவரது உடல்கூறு பரிசோதனை அறிக்கையை வழங்க வலியுறுத்தி, உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்துவிட்டனா்.

இந்த நிலையில், ராஜகுமாரியின் உடல்கூறு பரிசோதனை அறிக்கையை வழங்க வேண்டும். தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனையை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும். மருத்துவரை கைது செய்ய வேண்டும். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி, அவரது உறவினா்களும், மாா்க்சிஸ்ட் கட்சியினரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் எம்.வீரபத்திரன், மாவட்டக் குழு உறுப்பினா் ச.குமரன், நிா்வாகி செல்வன், விசிக நிா்வாகிகள் மற்றும் பெண்ணின் உறவினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.