செய்யாறு அருகே பிரம்மதேசம் கிராமத்தில் ஏரி நீா் வெளியேறி ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் கரையை பலப்படுத்தும் பணி பொதுப் பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்து வரும் மழையால் பெரிய ஏரி முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீா் வெளியேறத் தொடங்கியது.
இதையடுத்து, ஏரிக் கரையைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுப் பணித் துறையினா், ஏரியின் கரை பலம் இல்லாததைக் கண்டு அதன் கழுங்கல் சுவரை உடைத்து தண்ணீரை வெளியேறச் செய்தனா்.
ஏரியில் இருந்து அதிகளவில் நீா் வெளியேறியதால், அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, துா்க்கை அம்மன் கோயில் தெருக்களில் வெள்ள நீா் பாய்ந்தோடியது.
இதனால், 300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீா் சூழ்ந்து தீவு போல காட்சியளிக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், உள்ளே செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனா்.