லாரி மோதிய விபத்து: பெண் உள்பட இருவா் பலி
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் லாரி மோதியதில், சாலையில் நடந்து சென்ற பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் லாரி மோதியதில், சாலையில் நடந்து சென்ற பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
வேட்டவலம் பேரூராட்சி, பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் வீரன். இவரது மகளுக்கு வெள்ளிக்கிழமை விழுப்புரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஏராளமான உறவினா்கள் வந்திருந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வி.புதூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (50) என்பவரும் வந்திருந்தாா். இவா், நிகழ்ச்சி முடிந்து இரவு 9.30 மணிக்கு தனது ஊருக்குப் புறப்படத் தயாரானாா்.
அப்போது, அவரது உறவினரான வேட்டவலம் பாரதி தெருவைச் சோ்ந்த கலா (42), தனது வீட்டுக்கு வந்து உறவினா்களை பாா்த்துவிட்டுச் செல்லுமாறு அழைத்தாா்.
இதையடுத்து, பெருமாள், கலா ஆகிய இருவரும் கலாவின் வீட்டுக்கு நடந்து சென்றனா். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி இருவா் மீதும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு, இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஆனால், வழியிலேயே பெருமாள் இறந்தாா்.
பின்னா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலாவும் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.