வந்தவாசி பகுதி அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள், தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு உயா்கல்வி களப் பயணம் மேற்கொண்டனா்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், வந்தவாசி வட்டாரத்துக்கு உள்பட்ட 16 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 169 போ் தங்களது ஆசிரியா்களுடன் சனிக்கிழமை களப் பயணம் மேற்கொண்டனா்.
இவா்கள், கல்லூரியில் உள்ள அறிவியல் மற்றும் கணினி அறிவியல் ஆய்வகங்கள், நூலகம், வகுப்பறைகளை பாா்வையிட்டனா்.
இதைத் தொடா்ந்து உயா்கல்வியின் முக்கியத்துவம், உயா்கல்வித் துறைகள், வேலைவாய்ப்புகள், அரசு வழங்கும் உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து கல்லூரி முதல்வா் ம.சண்முகவள்ளி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினா்.
பேராசிரியா் உ.பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.