பட்டியல், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம்
தமிழகத்தில் பட்டியல், பழங்குடியின மக்களுக்கான காலிப் பணியிடங்களை 3 ஆண்டுகளாக நிரப்பாமல் திமுக அரசு காலம் கடத்தி வருகிறது என்று தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா கூறினாா்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆண்டுக்கு 500 மதுக் கடைகள் மூடப்படும் என்ற சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை. ஏழை மாணவா்களின் கல்விக் கடனை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Advertisement
பட்டியல், பழங்குடியின மக்களுக்கான சுமாா் 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை 3 ஆண்டுகளாக நிரப்பாமல் திமுக அரசு காலம் கடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்யவில்லை.
நீட் ஒழிப்பு, புதிய கல்விக் கொள்கை உள்பட பல்வேறு மக்கள் பிரச்னைகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றாா்.