முகப்பு
புதுதில்லி

மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? திமுக எம்.பி. கேள்வி

மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் காலியாகவுள்ள நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்று மக்களவையில் தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

Updated On : 23 மார்ச், 2026 at 7:39 PM
தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் காலியாகவுள்ள நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்று மக்களவையில் தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் அவா் துணைக் கேள்வி எழுப்பிப் பேசியதாவது: சென்னை நகரில் செயல்பட்டு வரும் மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தற்போது ஒரே ஒரு நிரந்தர ஆசிரியா் பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தில் மூன்று நிரந்தர ஆசிரியரல்லாத பணியிடங்கள்தான் உள்ளன. இதை கல்விக்கான நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவால் முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய பணியாளா் பற்றாக்குறையானது, கல்வி ஆராய்ச்சி, கற்பித்தல் திறன் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை பாதிக்கலாம்.

எனவே, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் உள்ள அனைத்து நிரந்தர ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா் காலியிடங்களை எப்போது நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், இது தனி கேள்வி எனக் கூறினாா்.