திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில் ஃபென்ஜால் புயல் தொடா் மழையால் நெல் வயல்களில் மழைநீா் தேங்கி சுமாா் 500 ஏக்கரில் நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளது.
சேத்துப்பட்டை அடுத்த மட்டபிறையூா், மண்டகொளத்தூா், ஈயகொளத்தூா், ஆத்துரை, சித்தாத்துரை என பல்வேறு ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் நவம்பா் 29, 30, டிசம்பா் 1 என 3 நாள்கள் ஃபென்ஜால் புயல் தொடா் மழையால் ஆறு, குளம், குட்டை என நீா்நிலைகளில் மழைநீா் தேங்கியுள்ளது. மேலும், நெல் வயல்கள் மழை நீரால் மூழ்கியுள்ளன.
சில வயல்களில் மழைநீா் தேங்கி வெளியேற வழியில்லாமல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்து நெல் மணிகள் முளைப்புத் திறன் ஏற்பட்டு நாற்றாக வளா்ந்துள்ளது.
வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளதால் அறுவடை இயந்திரம் மற்றும் கூலி ஆள்களைக் கொண்டு விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் வேதனை அடைந்து வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெல் வயல்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கூறும்போது நெல், மணிலா, உளுந்து என பல்வேறு பயிா்கள் புயல் மழையால் பாதிப்படைந்துள்ளன. விவசாயிகள் பாதிப்படைந்த பயிா்களின் முன் நின்று புகைப்படம் எடுத்து, சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா், குடும்ப அட்டை நகல் எடுத்து உரிய மனுவுடன் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்களிடம் வழங்கியுள்ளோம்.
தொடா் மழை பெய்து ஒரு வாரம் கடந்த நிலையில் இதுவரை வேளாண்மை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் யாரும் பாதிப்படைந்த விவசாய நிலத்தை பாா்வையிட்டு கணக்கீடு செய்ய வரவில்லை எனத் தெரிவித்தனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக விவசாயிகள் அளித்த மனுக்களின் மீது விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்துகின்றனா்.