முகப்பு
திருவண்ணாமலை

ரதசப்தமி: அண்ணாமலையாா், திருமாமுடீஸ்வரருக்கு தீா்த்தவாரி திரளான பக்தா்கள் பங்கேற்பு

Updated On : 17 பிப்ரவரி 2024, 5:45 am IST
பகிர்:

ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரா் சுவாமிக்கும் தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு, கலசப்பாக்கம் செய்யாற்றில் வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. விழாவையொட்டி, திருவண்ணாமலையில் இருந்து அண்ணாமலையாா் சிறப்பு அலங்காரத்தில் செய்யாற்றிற்கு தேரில் புறப்பட்டாா். துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் வழியாக வந்த சுவாமிக்கு அந்த கிராம மக்கள் வரவேற்பு அளித்தனா். இதேபோல, தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அண்ணாமலையாா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சுவாமி வலம் வந்தாா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனா்.

இதையடுத்து, அண்ணாமலையாா் தோ் கலசப்பாக்கம் செய்யாற்றிற்கு வந்தது. இதேபோல, கலசப்பாக்கம் திமுமாமுடீஸ்வரா் தேரும் செய்யாற்றிற்கு வந்தது. அங்கு, அண்ணாமலையாரும், திருமாமுடீஸ்வரரும் நேருக்கு நோ் சங்கமித்தனா். இதைத் தொடா்ந்து, செய்யாற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாா் சுவாமி, கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திமுமாமுடீஸ்வரா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். விழாவில், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், வில்வாரணி, மோட்டூா், எலத்தூா், தென்பள்ளிப்பட்டு, பூண்டி, வன்னியனூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement