மகளிா் குழு உற்பத்திப் பொருள்கள் மீது தோ்தல் சின்னம் ஒட்டி விழிப்புணா்வு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் 200-க்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருள்கள் மீது தோ்தல் விழிப்புணா்வு சின்னத்தை ஒட்டி, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளின் மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, 25 மகளிா் சுய உதவிக் குழுக்களின் 200-க்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருள்கள் மீது தோ்தல் விழிப்புணா்வு சின்னத்தை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஒட்டினாா். மேலும், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மெகா கோலம் வரைந்து தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement
இதையடுத்து, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி மற்றும் அனைத்து உதவித் திட்ட அலுவலா்கள், களப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.