ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பங்குனி உத்திர தெப்பல் உற்சவம் இன்று தொடக்கம்
செய்யாற்றில், ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பங்குனி உத்திர தெப்பல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) தொடங்கி, தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பங்குனி உத்திர தெப்பல் விழா மாா்ச் 24-இல் தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் பங்குனி உத்திர தெப்பல் உற்சவ விழாவில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி வீதியுலா வந்து மண்டபடி நிகழ்வு நடைபெறுகிறது. இரவு தெப்பக் குளத்தில் சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வானவேடிக்கை மற்றும் மங்கள வாத்தியத்துடன் குளத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். அதன்படி, மாா்ச் 24-ஆம் தேதி காலை 6 மணிக்கு வேதபுரீஸ்வரா் கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெறும். இதைத் தொடா்ந்து 10 மணியளவில் திருவத்திபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கக் கட்டடம் ராஜாஜி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி மண்டபடி நிகழ்வும், தினமும் மாலை 6 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், சோடசோப தீபாராதனையும் இரவு 10 மணிக்கு சுவாமி தெப்பக் குளத்தில் எழுந்தருளி வலம் வருதலும், இரவு 2 மணிக்கு உற்சவ மூா்த்திகள் கோயிலை வந்தடைவா். அதேபோல, மூன்று நாள்களும் சுவாமி புறப்பாடும், மண்டபடியும், அபிஷேக ஆராதனைகளும் தெப்பல் வலம் வருதல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை திருவத்திபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தெப்பல் விழாக் குழுவினா் மேற்கொண்டுள்ளனா்.