திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் தண்டரை அணைக்கட்டு கால்வாய் புதா் மண்டிய நிலையில், தண்ணீா் வரத்தின்றி பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்யாறு வட்டம் நெல் சாகுபடியில் சிறந்து விளங்கும் பகுதியாகும். இங்கு சுமாா் 6,135 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற வேண்டி தண்டரை அணைக்கட்டு கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக 1969-இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1975-இல் திறந்து வைக்கப்பட்டது.
இந்த தண்டரை அணைக்கட்டு கால்வாய் திட்டத்தால் செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனா். தண்டரை அணைக்கட்டில் இருந்து சுமாா் 21 கி.மீ. தொலைவுக்கு பாசனக் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கால்வாயில் செல்லும் தண்ணீா் பெரும்பள்ளம், வடதண்டலம், கொடநகா், செய்யாறு வழியாக பரிதிபுரம், புளியரம்பாக்கம், காழியூா், பெருங்களத்தூா், பல்லி, இரும்பந்தாங்கல், சித்தாத்தூா் உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பியவுடன் கடைசியாக திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஏரியான தூசி மாமண்டூா் ஏரியை சென்றடையும்.
மாமண்டூா் ஏரி நீரை அந்தப் பகுதி விவசாயிகள் தொடா்ந்து மூன்று போகங்களுக்கும் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வந்தனா்.
தண்டரை பாசனக் கால்வாய் அமைக்கப்பட்டு சுமாா் 35 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 2014-இல் நீா்ப்பாசன சங்கத்தினா் விடுத்த கோரிக்கையின் பேரில், அப்போதைய அமைச்சா் முக்கூா்.என்.சுப்பிரமணியனின் முயற்சியால் சுமாா் ரூ.14.84 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் தண்டரை அணைக்கட்டு கால்வாயில் இருந்து தூசி மாமண்டூா் ஏரிக்குச் செல்லும் பாசனக் கால்வாயில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
செய்யாறில் இருந்து தூசி மாமண்டூா் ஏரிக்குச் செல்லும் வழியில் உள்ள கிராமங்களின் வழியாக செல்லும் பாசனத் கால்வாய் முழுவதும் இருபுறமும் செடிகள் முளைத்துள்ளன. இதனால், இந்தக் கால்வாய் வழியாக பாசன நீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாசனக் கால்வாயை நம்பியிருக்கும் அந்தப் பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா். இதனால், நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
செடிகளை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.