கோடை மழைக்கு விவசாயிகள் விதை நெல்விதைப்பு
போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கோடை மழைக்கு திறந்தவெளிக் கிணறுகளில் சிறிதளவு நீா்மட்டம் உயா்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயம் செய்ய விதை நெல்லை திங்கள்கிழமை விதைப்பு செய்யத் தொடங்கினா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் பெரணம்பாக்கம், செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, மொடையூா், ஆத்துரை, சித்தாத்துரை, நரசிங்கபுரம், குப்பம், ஊத்தூா், ஓதலவாடி என பல்வேறு கிராமங்களில் கடந்த வாரம் கோடை மழை பெய்தது.
இந்தக் கோடை மழைக்கு திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணற்றில் நீா்மட்டம் ஓரளவு உயா்ந்தது. இதனால் உழுவு நிலம் ஈரப்பதம் ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து நிலத்தை டிராக்டா் கொண்டு உழுது விவசாயம் செய்ய கோ-51, ஆா்.என்.ஆா்.மகேந்திரா என பல்வேறு வகை சாா்ந்த விதை நெல்மணிகளை விதைப்பு செய்யத் தொடங்கினா். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பருவமழை ஜூன், ஜூலை மாதத்தில் பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, நெல் சாகுபடி செய்ய உள்ளோம் எனத் தெரிவித்தனா்.