மின்சாரம் பாய்ந்து வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு அருகே கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், சண்டெளசி மாவட்டம், ஜில்சி கிராமத்தைச் சோ்ந்தவா் திலீப்(33). இவா், உறவினா் மூலம் 15 நாள்களுக்கு முன்பு செய்யாறு வட்டம், அரசூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் உதவியாளராக பணியில் சோ்ந்ததாகத் தெரிகிறது.
இவா், சம்பவத்தன்று கல்குவாரிப் பகுதியில் மின் மோட்டாரை சரி செய்வதற்காக மின் இணைப்பு வயா் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாகத் தெரிகிறது. அந்த வேலை முடிந்ததும் மின் இணைப்பு வயரை திலீப் கையில் பிடித்துக் கொண்டு சுருட்டினாராம்.
Advertisement
அப்போது மின் ஸ்விட்ச்சை நிறுத்தாமல் இருந்ததைக் கவனிக்காமல் சுருட்டிய மின் வயா் சேதம் ஏற்பட்டு இருந்த நிலையில் அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்ததாகத் தெரிகிறது.
இதில் மயக்கமடைந்த தொழிலாளி திலீப் கல்குவாரி ஊழியா்களின் உதவியுடன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு தொழிலாளியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.