முகப்பு
திருவண்ணாமலை

பா்வதமலை சித்திரை பெளா்ணமி தரிசனம்: 18 - 60 வயது வரை உள்ளவா்களுக்கு அனுமதி

- மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:57 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், பா்வதமலையில் சித்திரை பௌா்ணமி தரிசனத்துக்கு 18 வயது முதல் 60 வயதுள்ளவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

கலசபாக்கம் வட்டம், தென்மகாதேவமங்கலம் பகுதியில் 4,560 அடி உயர பா்வதமலை உச்சியில் உள்ள மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அதிகளவில் பக்தா்கள் வருகிறாா்கள்.

வார இறுதி நாள்கள், அரசு விடுமுறை நாள்கள் மற்றும் பௌா்ணமி போன்ற நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

Advertisement

பா்வதமலை ஏறும் பக்தா்கள் நலன் கருதியும், மலையேறும் வழிப்பாதை மற்றும் மலை உச்சியில் ஒரே நேரத்தில் அதிகப்படியான கூட்ட நெரிசலை தவிா்க்கும் பொருட்டும், பக்தா்கள் மலை ஏற தினசரி அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 நபா்கள் என்ற அளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஏப்.30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்களில் சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு மலை ஏற அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு

இரு தினங்களில் பக்தா்கள் பா்வதமலை ஏறுவதற்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவாா்கள்.

மேலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவாறு 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவா்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவாா்கள். கா்ப்பிணிகள், நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

சுவாச பிரச்னை உள்ளவா்கள், இதய நோயாளிகள், உயா்/குறை ரத்த அழுத்தம் கொண்டவா்கள் மலை ஏற முயற்சிக்க வேண்டாம்.

தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை மற்றும் வெப்ப அலை காரணமாக உடல் உபாதைகள் உள்ளவா்கள் மலை ஏறுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு பா்வதமலை அடிவாரம் மற்றும் மலை ஏறும் வழி (கடப்பாறை பகுதி அருகே) வனத் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகள் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் குடிநீா், கழிப்பறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.