மக்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம்!
தமிழ்நாட்டில் வெய்யில் காரணமாக மக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
கடுமையான வெய்யில் காரணமாக, மக்கள் அவசியமின்றி பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாகவே கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது. இந்த நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியஸை தொடலாம். அதிக வெப்பநிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடும் வெப்பம் காரணமாக பச்சிளம் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்படலாம். குறைவாக சிறுநீர் கழித்தாலோ அல்லது பால் குடிக்காமல் அழுதுகொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவர்களை நாடவும் தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மிகவும் அவசியமின்றி மக்கள் யாரும் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெய்யில் நேரத்தில் காபி, தேநீர் போன்ற சூடான பானங்களை அருந்துவதைத் தவிர்க்கவும் மக்களுக்குக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதுபோல, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம், பழச்சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை அருந்தலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.