வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக்கோயில் கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயரமுள்ள ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலை மீது ஸ்ரீபா்வதவா்த்தனி சமேத ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை தீபத்தின் போதும் இந்த மலைக்கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்த நிலையில், தை பெளா்ணமியான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த மலைக்கோயிலில் கிரிவலம் தொடங்கியது.
இதையொட்டி மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்ட பக்தா்கள் கைலாய மேள வாத்தியங்களுடன் வெண்குன்றம், அம்மையப்பட்டு, மும்முனி, புலிவாய், காஞ்சிபுரம் சாலை வழியாக மலை அடிவாரம் அருகில் உள்ள தனியாா் பள்ளி வரை சுமாா் 13 கி.மீ. தொலைவுக்கு கிரிவலம் சென்றனா். முன்னதாக மலைக் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
கிரிவலத்துக்கான ஏற்பாடுகளை வெண்குன்றம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் கிரிவலக் குழுவினா் செய்திருந்தனா். மேலும், ஒவ்வொரு மாத பெளா்ணமியன்றும் கிரிவலம் நடைபெறும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.