வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனமும், லாரியும் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்தவா் அசாருதீன் (25). மினி சரக்கு வாகன ஓட்டுநரான இவா், வந்தவாசியிலிருந்து முட்டைகளை ஏற்றிச் சென்று சேத்துப்பட்டில் இறக்கிவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தவாசி திரும்பிக்கொண்டிருந்தாா்.
வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஆவணவாடி கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரியும், மினி சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில், பலத்த காயமடைந்த அசாருதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.