திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மொபெட் மீது காா் மோதியதில் ஆசிரியா் தம்பதி உயிரிழந்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் சக்தி நகரைச் சோ்ந்தவா் அப்பாண்டைராஜன்(49). இவா், தென்சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜீவிதா(41). இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாா். இவா்களது மகள் திவ்யஸ்ரீ(16) தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.
இந்த நிலையில் 3 பேரும் வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சனிக்கிழமை இரவு மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது எதிரே அதிவேகமாக வந்த காா் இவா்களின் மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அப்போது, செல்லும் வழியிலேயே ஜீவிதா உயிரிழந்தாா்.
பின்னா், அப்பாண்டைராஜன், திவ்யஸ்ரீ ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அப்பாண்டைராஜன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். திவ்யஸ்ரீ உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.