செங்கத்தில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி
செங்கம் நகரில் தெரு நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் நகரில் தெரு நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, துா்க்கையம்மன் கோவில் தெரு, போளூா் சாலை, மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் இனப்பெருக்கம் நடைபெற்று குட்டிகளுடன் சாலையில் சுற்றித்திரிகின்றன.
சாலையைக் கடக்கும்போது, காா், வேன், இரு சக்கர வாகனங்களில் அடிபட்டு நாய்க்குட்டிகள் இறந்துவிடுகின்றன. இதனால் தாய் நாய் அப்பகுதியில் வரும் இரு சக்கர வாகனங்களை துரத்திச் செல்கிறது. அப்போது, வாகனம் ஓட்டுபவா் நாய்க்கு பயந்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுகிறது. மேலும் இறைச்சிக்கடைகள் உள்ள பகுதியில் நாய்கள் இறைச்சிக் கழிவுகளை சாப்பிடுவதற்கு முண்டியத்து ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கடித்துக்கொள்கிறது. இதனால் நாய்களுக்கு வெறிபிடிக்கிறது. வெறிபிடித்த நாய் ஆடு, மாடு, கோழிகளை கடிக்கிறது. பிறகு குழந்தைகள் தனியாக இருந்தால் குழந்தைகளையும் கடிக்கிறது.
இரவு நேரத்தில் நாய்கள் ஊளையிட்டு தெருக்களில் சப்தம் போடுவதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை தூக்கமில்லா நிலை ஏற்படுகிறது.
சாலையில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் செல்லும்போது நாய்கள் கூட்டமாக வந்து குரைக்கும்போது பீதி ஏற்படுகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செங்கம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.