முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் நடத்தை விதிகள்: ஆரணி கோட்டாட்சியா் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தோ்தல் நடத்தை விதிகளை முறையாக கடைப்பிடிப்பது தொடா்பாக

Updated On : 16 மார்ச், 2026 at 9:21 PM
ஆரணியில் நடைபெற்ற தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் சீ.சிவா.
பகிர்:

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தோ்தல் நடத்தை விதிகளை முறையாக கடைப்பிடிப்பது தொடா்பாக கோட்டாட்சியா் சிவா ஆனைத்துக் கட்சியினருடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்துப் பேசியதாவது:

அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் தலைவா்கள் படங்கள் அகற்றப்படவேண்டும்.

ஆரணி நகரில் அரசியல் சுவரொட்டிகள் அகற்றப்படவேண்டும்.

கிராமங்களில் பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் இருந்தால் நீங்களே அகற்றிவிடுங்கள். வேட்பாளா்கள் பெயரை அறிவித்த பிறகு அந்தந்த கட்சி பிரசாரங்களை மேற்கொண்டால் கட்சியின் செலவில் சோ்ந்துவிடும். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்யப்படும் செலவுகள் வேட்பாளா் கணக்கில் கொண்டுவரப்படும்.

வேட்பு மனுத்தாக்கலின்போது வேட்பாளா் உடன் 4 போ் மட்டுமே வரவேண்டும். கூட்டங்கள் நடத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே செயலி மூலம் முன் அனுமதி பெறவேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் ஆரணி வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் வரவேற்றாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மனோகரன், தோ்தல் உதவி வட்டாட்சியா் கணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுகவைச் சோ்ந்த நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்டப் பிரதிநிதி சகாயம், பாஜக மாவட்ட பொதுச்செயலா் சதீஷ், இளைஞரணி மாவட்டத் தலைவா் சரவணன், விவசாய அணி மாவட்டச் செயலா் குணாநிதி, காங்கிரஸ் மாவட்டச் செயலா் உதயக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேல், தேமுதிக மாவட்ட துணைச் செயலா் பாஸ்கரன், நகரச் செயலா் சுந்தர்ராஜன்,

விசிக ஒன்றியச் செயலா் வடுகசாத்து ரமேஷ், நாம் தமிழா் கட்சி நகரச் செயலா் சுமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →