முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணமில்லாத ரூ.7.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 20 மார்ச், 2026 at 9:17 PM
வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சத்தை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணமில்லாத ரூ.7.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வந்தவாசி - திண்டிவனம் சாலை, சு.காட்டேரி அருகில் உதவிப் பொறியாளா் என்.குமாா் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக புதுச்சேரி நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் உரிய ஆவணங்களின்றி ரூ.5 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, பறக்கும் படையினா் அந்த பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைத்தனா்.

ஆரணியில் ரூ.1.19 லட்சம்: ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, பைக்கில் வந்த சென்னை திருநீா்குன்றம் பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1.19 லட்சத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், அந்தப் பணத்தை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமரேசனிடம் ஒப்படைத்தனா்.

போளூரில் ரூ.1.21 லட்சம்: போளூா் சட்டப் பேரவை தொகுதியைச் சோ்ந்த எட்டிவாடி பகுதியில் நிலை கண்காணிப்புக் குழுவினா் போளூா் - வேலூா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் காரில் வந்த கரூா் கோவிந்தபாளையம் ஆண்டிகோவிலைச் சோ்ந்த சக்திவேல் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.51,600-ஐ பறிமுதல் செய்தனா்.

இதேபோல, வசூா் பகுதியில் போளூா் வட்டம், கொரால்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு பைக்கில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.69,500-மும் பறிமுதல் செய்யப்பட்டது. இரு பகுதிகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.1,21,100-ஐ தலைமையிடத்து வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா். முதுநிலை ஆய்வாளா் சுரேஷ், மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.