சரக்கு வாகனத்தின் கதவு மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் கதவு கழன்று சென்று மோதியதில் டிராக்டரை ஓட்டி வந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் கதவு கழன்று சென்று மோதியதில் டிராக்டரை ஓட்டி வந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (37). இவா் புதன்கிழமை மாலை மினி சரக்கு வாகனத்தை மரக்காணத்தில் இருந்து வந்தவாசி வழியாக செய்யாறு நோக்கி ஓட்டிச் சென்றுள்ளாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் புறவழிச் சாலையில் வளைவில் திரும்பும்போது மினி சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
Advertisement
அப்போது, அந்த வாகன கூண்டின் பின்பக்கக் கதவு கழன்று சென்று எதிரே மரக்கட்டைகளை ஏற்றிய டிராக்டரை ஓட்டி வந்த வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் (50) மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.