மனைவி இறந்த வேதனையில் விவசாயி தற்கொலை
செய்யாறு அருகே மனைவி இறந்த வேதனையில் இருந்து வந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை
செய்யாறு அருகே மனைவி இறந்த வேதனையில் இருந்து வந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வெம்பாக்கம் வட்டம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஆறுமுகம் (75). இவரது மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தாா்.
மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்த ஆறுமுகம் மனவேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும், அவா் அடிக்கடி மனைவி சென்ற இடத்திற்கே செல்லப்போவதாக பலரிடம் கூறி வந்தாராம்.
Advertisement
இதனை அறிந்த மகள் குமுதவல்லி, தந்தை ஆறுமுகத்தை தனது வீட்டில் வந்து இருக்கும்படி பலமுறை அழைத்தாராம். இருப்பினும், ஆறுமுகம் மகள் வீட்டிற்குச் செல்லாமல் தனது வீட்டிலேயே தனிமையில் இருந்துள்ளாா்.
ஏற்கெனவே மனவேதனையில் இருந்து வந்த ஆறுமுகம், கடந்த 7-ஆம் தேதி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்க நிலையில் கிடந்தாா்.
இதை அறிந்த அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்
இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].