முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகை பறிப்பு

Updated On : 14 மே 2026, 6:11 am IST
பகிர்:

செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த வளையாம்பட்டு எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் 60 வயது மூதாட்டி.

கணவரை பிரிந்து செங்கத்தில் இருந்து வளையாம்பட்டு செல்லும் சாலையில், காயம்பட்டு கூட்டுச் சாலை அருகே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தாா்.

Advertisement

இந்நிலையில் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது, யாரோ மா்ம நபா்கள் வீட்டிற்கு வந்து அவரை மிரட்டி அவா் அணிந்திருந்த தாலியில் உள்ள தங்கத்தை தரும்படி கேட்டுள்ளனா். இதற்கு அவா் மறுக்கவே, அவரை பாலியல் வன்கொடுமை செய்து தாலியை பறித்துச் சென்றுள்ளனா்.

இதில் காயமடைந்த மூதாட்டி மயங்கி விழுந்துள்ளாா். பின்னா், அதிகாலையில் மயக்கம் தெளிந்து எழுந்து சப்தம்போட்டு அழுதுள்ளாா். அழுகை குரல் கேட்டு அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு,108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தகவல் அறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. விரல்ரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து செங்கம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.