செய்யாறு - ஆரணி இடையே நான்கு வழிச்சாலை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
செய்யாறு - ஆரணி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படுமா?
தே.சாலமன்
செய்யாறு - ஆரணி சாலையில் 33 கிலோ மீட்டா் தொலைவில் 66 வளைவுகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது செய்யாறு தொகுதி. செய்யாறு - ஆரணி சாலை காஞ்சிபுரம், சென்னை, ஆரணி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய நகரங்களை இணைக்கும் மிக முக்கியமான மாநில நெடுஞ்சாலையாகும்.
Advertisement
இந்தச் சாலை வழியாகத் தான தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் சேலம், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம், சென்னை பகுதிகளுக்கு சென்று வருகின்றன. சரக்குப் போக்குவரத்து மற்றும் பேருந்து போக்குவரத்து என 24 மணி நேரமும் நடைபெறுகிறது.
மேலும், ஆரணி பட்டுச்சேலை, களம்பூா் அரிசி மற்றும் செங்கல் உள்ளிட்ட பொருள்கள் லாரிகளில் சென்னைக்கு அதிகளவில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
செய்யாறு - ஆரணி சாலையில் வடதண்டலம், பைங்கினாா், அருகாவூா், பெரும்பள்ளம், சுண்டிவாக்கம், தண்டரை, சேராம்பட்டு, இருங்கூா், தட்டச்சேரி, ஆருா் மடுவு, பனையூா், மாமண்டூா், இரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில் 66 வளைவுகள் உள்ளன.
33 கி.மீ. தொலைவில் அதிகளவில் சாலை வளைவுகள இருந்து வருவதால் பேருந்துப் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், வளைவுப் பகுதிகளில் பேருந்தில் பயணிப்பவா்கள் அச்சத்துடனே செல்கின்றனா்.
இந்தச் சாலையில் ஏற்படும் தொடா் விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தவும் இரு வழிச்சாலையாக இருந்து வரும் இந்தச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.