முகப்பு
வேலூர்

குடியாத்தம் கைத்தறி லுங்கி ஏற்றுமதியில் சுணக்கம்!

வேலூர், ஜூன் 23:   குடியாத்தம் கைத்தறி லுங்கிகள் ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.   இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லுங்கிகள் தேக்கமடைந்துள்ளன.   வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சுமார் 7500 தற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:29 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 7:57 PM

வேலூர், ஜூன் 23:   குடியாத்தம் கைத்தறி லுங்கிகள் ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

  இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லுங்கிகள் தேக்கமடைந்துள்ளன.

  வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சுமார் 7500 தறிகள் கைத்தறி லுங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 75 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

Advertisement

  இந்த லுங்கிகள், இலங்கை, இந்தோனேஷியா, மியான்மர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

  பொருளாதார தேக்க நிலை மற்றும் நூல், சாயம் விலையேற்றம், விசைத்தறிகளின் தலையீடு ஆகியவற்றால் கைத்தறி லுங்கி ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் அதிக அளவில் வந்தன. ஆனால், அவற்றை முழுமையாக கைத்தறிகளில் முடித்துத் தர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 10 சதவீதம் கைத்தறிகளிலும், 90 சதவீதம் விசைத்தறிகளிலும் தயாரித்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், அனைத்தும் கைத்தறி ரகங்களாகவே ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

  இப்போது லுங்கி தயாரிப்பில் விசைத்தறிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. கைத்தறி ரகங்களுக்கு என மட்டுமே ஒதுக்கப்பட்ட 16 வகை ரகங்களை, விசைத்தறிகளுக்கு மாற்றியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

  கைத்தறிக்கான ரகங்களை விசைத்தறிகளில் பயன்படுத்தக்கூடாது எனச் சட்டம் இருந்தும், அதை அரசு கடைப்பிடிக்கவில்லை.

  மேலும், லுங்கிகளின் மீது பயன்படுத்தப்படும் லேபிள்களை முறைப்படுத்தாது; தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப கைத்தறி லுங்கிகளின் வடிவமைப்புகளில் புதுமையைப் புகுத்தாதது ஆகியவையே ஏற்றுமதி குறைந்ததற்குக் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து குடியாத்தம் கைத்தறி லுங்கி உற்பத்தியாளர்கள் சங்க இயக்குநர் வி.என்.தனஞ்செயன் கூறியது:

  கைத்தறி ரகங்களை விசைத்தறியில் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது, வங்கிக் கடனுக்கான வட்டியைக் குறைப்பது, நூல், சாயம் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் லுங்கி ஏற்றுமதி அதிகரிக்கும்.

  மேலும், காலத்துக்கு ஏற்ப கைத்தறி லுங்கிகளைத் தயாரித்து விற்பதால், தொடர்ந்து பணி ஆணைகள் கிடைத்து வருகின்றன. பழைய டிசைன்களில் லுங்கிகளைத் தயாரித்து வைத்திருக்கும் பல நிறுவனங்களில் சுமார் ரூ.5 கோடி வரை லுங்கிகள் தேக்கமடைந்துள்ளன. புதிய டிசைன்களில் லுங்கிகளைத் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வும் தேவை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.